கோலாலம்பூர், மார்ச்.25-
நாட்டில் நிலவி வரும் வெப்பமான வானிலையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் முறையான விளையாட்டு உடைகளை அணிவதற்குப் பள்ளி நிர்வாகங்கள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு பள்ளியும், கல்விக் கழகமும் தங்கள் பகுதியின் தற்போதைய சூழலைப் பொறுத்து இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் தவணை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது, வெப்ப அலையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக, வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், வெளிப்புறச் செயல்பாடுகளை குறிப்பாக புறப்பாட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.








