கோலாலம்பூர், ஏப்ரல் 29-
பேரரசரின் பெயருக்கு களங்கம் விளைவித்தது தொடர்பில், பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் ச்செகு பார்ட் என்றழைக்கப்படும் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது கோலாலம்பூர் செசியன் நீதிமன்றத்தில் இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
45 வயதுடைய அவ்வாடவர், இவ்வாண்டு ஜனவரியிலும் இம்மாதத் தொடக்கத்திலும், பேரரசருக்கு எதிராக தமது முகநூல் கணக்கில் அவதூறுகளை பரப்பியதாக, நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த ச்செகு பார்ட், நீதிபதியிடம் மேல் விசாரணைக் கோரினார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்தாயிரம் வெள்ளி வரையிலான அபராதம் அல்லது கூடிய பட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இரண்டாம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஈராண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனைகளாக விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் முறையே தனிநபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் வெள்ளி தொகையைச் செலுத்தி, ச்செகு பார்ட் வெளியில் செல்ல அனுமதித்த நீதிபதி, வழக்கின் மறுசெவிமடுப்பை மே மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.








