கிள்ளான், தெப்பி சுங்கை, வீடமைப்புப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கைகலப்பு மற்றும் ரகளையில் ஈடுபட்டதாக ஒன்பது இந்திய நபர்கள், நேற்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், இரு மகன்களும் அடங்குவர்.
இந்த ஒன்பது பேரும் மாஜிஸ்திரேட் அமீருல் அசிராப் அப்துல் ரஸீத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
23 வயது தி.லோஹிட விஷ்ணு, 34 வயது பி. குமார், 43 வயது எம். கோமதாஸ், 52 வயது ஆர்.எம். பாண்டியன், 37 வயது எம். பாஸ்கரன், 40 வயது எம். தியாகு, 52 வயது தி.தி. செல்வன் மற்றும் அவரின் இரண்டு மகன்களான 25 மோகன் ராஜ், 28 வயது ரூபன் ராஜ் ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.
இந்த ஒன்பது பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஒருவெருக்கொருவர் கற்களை வீசி சண்டையிட்டுக்கொண்டு ரகளைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 147 ஆவது பிரிவின் கீழ் ஒன்பது பேரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
எனினும் ஒன்பது பேரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் ஒரு நபர் உத்தரவாதத்துடன் தலா 2,500 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவ்வழக்கு வரும் அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


