காஜாங், மே 28-
காஜாங், செமென்யே, புக்கிட் ப்ரோகா மலைப்பகுதியில் நேற்று பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்ட 16 வயது இளைஞர், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 மணியளவில் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
தனது இரு நண்பர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த இளைஞர் வழிதவறி, அந்த மலைப்பகுதியில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த இளைஞரை காணாதது குறித்து நேற்று மாலை 4 மணியளவில் அவசர அழைப்பை பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த இளைஞரை தேடும் பணியை முடுக்கி விட்ட நிலையில் அதிகாலை 2 மணி வரை மேற்கொள்ளப்பட்ட தேடலில் எந்த பலனும் கிட்டவில்லை.
இன்று காலையில் அரச மலேசிய போலீஸ் படை, ரேஞ்சர் படையினர், பொது தற்காப்பு படையினர் மேற்கொண்ட தேடலில் அந்த இளைஞர் பிற்பகல் 2.50 மணியளவில் Bukit Broga நுழைவாயிலிருந்த 100 மீட்டர் தூரத்தில் 10 மீட்டர் பாதாளத்தில் விழுந்து கிடந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு இலாகா இயக்குநர் வான் முஹம்மது ரஸாலி தெரிவித்தார்.
சுயநினைவு கிடந்த நிலையில் கிடந்த அந்த இளைஞரை பரிசோதனை செய்த சுகாதார அதிகாரிகள், அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர் என்று வான் முஹம்மது குறிப்பிட்டார்.








