ஜோகூர், கூலாய் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தேசியக் கொடியும் ஜோகூர் மாநிலக் கொடியும் தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் நேப்பாள நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும், உள்ளூர் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 மற்றும் 48 வயதுடைய இருவரும் நேற்று திங்கட்கிழமை காலை 10.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து போலீஸ் துறை விசாரணை மேற்கொண்டு இருவரையும் அடையாளம் கண்டு கைது செய்ததுடன், இரு கொடிகளையும் பணிப் பட்டியலையும் பறிமுதல் செய்துள்ளது.
பாதுகாவலராக பணியாற்றும் நேப்பாள ஆடவரே கொடிகளை தலைகீழாக ஏற்றியிருக்கலாம் என்றும், அவரிடம் கொடிகளை வழங்கி ஏற்றுமாறு உத்தரவிட்டது அந்தப் பெண் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்றும், போதைப்பொருள் சோதனையில் இருவரும் எதிர்மறை முடிவைப் பெற்றுள்ளதாகவும் Tan Seng Lee தெரிவித்தார்.








