மெர்டேகா மாதத்தை முன்னிட்டு நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், மேடிடெக் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் ராஜசேகரன் தலைமையில் சுமார் 200 தேசியக் கொடிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் மெர்டேகா மாதத்தில் தங்களது வீடு மற்றும் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி வருவதாகக் கூறிய ராஜசேகரன், இம்முறை வழக்கத்தைவிட அதிகமான தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்ததாக தெரிவித்தார்.
தங்களது நிறுவனத்தில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித இன வேறுபாடுமின்றி ஒற்றுமையுடன் பணியாற்றி வருவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள் நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் நாட்டுப்பற்று மற்றும் தேசிய ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறுவர்களுக்கும் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டதாக ராஜசேகரன் தெரிவித்தார்.
மெர்டேகாவின் முக்கியத்துவத்தையும் நாட்டுப்பற்றின் அவசியத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது தங்களது நோக்கம் என்றும், இந்த முயற்சியை ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து முன்னெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் முதியோர் இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தேசியக் கொடிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார்.









