எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரே அளவிலான நிதி கிடைக்க வேண்டும்! இதை அரசாங்கத்தின் விருப்பத்துக்கு விட்டுவிடாமல், சட்டத்தின் மூலம் நிரந்தரமாக உறுதி செய்ய வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான தொகுதி நிதி வழங்குவதற்கான சிறப்புச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் கூறினார்.
இது தற்காலிக அரசாங்க சலுகையாக இல்லாமல், நிரந்தரமான சீர்திருத்தமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த நிதி நேரடியாக மக்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் என்றும், அரசியல் சார்பின் அடிப்படையில் எந்தத் தொகுதியும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற கோபிந்த் சிங், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு எம்.பி.க்கும் பொறுப்பு ஒன்றுதான்; எனவே நிதியும் சமமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்








