மலேசியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிச் சேவை, பணப் பரிவர்த்தனை மற்றும் நிதி வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் பூஸ்ட் எஸ்.எம்.ஈ எனும் புதிய டிஜிட்டல் தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கோலாலம்பூர், கே.எல் செண்டரலில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவிற்கு தலைமையேற்று உரையாற்றிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் நிதியுதவிகள் தற்போது பல்வேறு அமைப்புகளிலும் தளங்களிலும் சிதறிக் கிடப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இதனால் அவற்றை அணுகுவதில் நிறுவனங்களுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. பூஸ்ட் எஸ்.எம்.ஈ போன்ற ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம், இந்தச் சிக்கலைக் குறைத்து, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதி மற்றும் அரசாங்க ஆதரவுகளை எளிதாக அணுகுவதற்கு உதவக்கூடும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அந்த வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டும் என்ற கருத்தையும் கோபிந்த் சிங் முன்வைத்துள்ளார்.
இதனிடையே பூஸ்ட் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி ஷெயந்தா அபேகோன், கூறுகையில், வங்கி, பணப்பரிவர்த்தனை மற்றும் நிதிச் சேவைகள் தனித்தனியாக இல்லாமல் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தளம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
எஸ்.எம்.ஈ மூலம் நிறுவனங்கள் ஐந்து நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கைத் தொடங்குவதுடன், டுவிட் நாவ் கியூ ஆர், இணையவழி பணப்பரிவர்த்தனை மற்றும் அட்டைகள் மூலம் பணம் பெற முடியும் என்று ஷெயந்தா அபேகோன் விளக்கினார்.








