கோலாலம்பூர், மார்ச்.25-
ஈரான் மற்றும் மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், மலேசியா பாதுகாப்பான நாடாக இருந்தாலும், நாம் முழுமையாகத் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதால் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையமான Pulapol- லில் இன்று நடைபெற்ற 219-ஆவது போலீஸ் தின கொண்டாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றிய பிரதமர் , சர்வதேச உளவுத்துறை தகவல்களின்படி தேசிய பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என்றும், சில தரப்பினரின் விரக்தியான செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் கவனிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு மோதல் தொடர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழல்களை மதிப்பிடவும், அதற்கேற்ப அவசரகாலத் திட்டங்களை வகுக்கவும் உள்துறை மற்றும் தற்காப்பு அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற போலீஸ் தின விழாவில், முன்னதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் பிரதமரை வரவேற்றார்.
இந்த விழாவின் போது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குற்றவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் "Buku MESRA PDRM-Modul Kesedaran Jenayah Kanak-Kanak dan Remaja" என்ற புத்தகத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.








