2018-ஆம் ஆண்டு லெபனான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து “ஆய்வு” என்ற பெயரில் பெற்றுக்கொண்ட 43 நகைகள் தொடர்பாக 14.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது மலேசிய மதிப்பில் சுமார் 62 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லெபனானைச் சேர்ந்த குளோபல் ராயல்டி டிரேடிங் எஸ்ஏஎல் என்ற நிறுவனம் தாக்கல் செய்திருந்த இந்த வழக்கில், அந்த 43 நகைகளையும் ரோஸ்மா திரும்ப ஒப்படைக்க வேண்டும் அல்லது அவற்றின் மதிப்பான 14.6 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குவே சியூ சூன், நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தீர்ப்பளித்தார்.
இதனிடையே, அந்த நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி, அவர்களை மூன்றாம் தரப்பாக வழக்கில் இணைத்திருந்த ரோஸ்மா, தமக்கு ஏற்படும் இழப்பீட்டை போலீசார் ஏற்க வேண்டும் என கோரியிருந்தார்.
எனினும், அந்த இழப்பீட்டு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
இதன் மூலம், 43 நகைகளையும் திரும்ப ஒப்படைக்க முடியாவிட்டால், அவற்றின் முழு மதிப்பையும் ரோஸ்மா மன்சோர் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.








