மலாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வயதான காவலாளி ஒருவரை அடித்து, கடும் காயங்களை விளைவித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஒரு சமையல்காரரான ஹெர்மன் ரிவே, என்பவர் மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 8 மணியளவில் மலாக்கா தெங்காவில் பங்சாபுரி லக்சமனா சேங் ஹோ 2 அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 68 வயது காவலாளி எஸ். வேதநாயகம் ஜோசப் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கி காயங்களை விளைவித்ததாக அந்த சமையல்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த வீடமைப்புப்பகுதியின் கீழ் தளத்தில் தவறான பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த காவலாளி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவரை தாக்கி அராஜகம் புரிந்ததாக ஹெர்மன் ரிவேக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.








