கோலாலம்பூர், மார்ச்.25-
'கார்ப்பரேட் மாஃபியா' புகார்களுக்கு உள்ளாகியுள்ள தொழிலதிபர் விக்டர் சின் (Victor Chin) தற்போது எங்கே இருக்கிறார் என்பது தங்களுக்குத் தெரியும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டத்தில் பேசிய அவர், விக்டர் சின் மீதான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், அவரது கடப்பிதழை ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் முறைப்படி முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார்.
முன்னதாக, விக்டர் சின் வெளிநாட்டில் இருப்பதாகவும், சர்வதேச போலீஸ் துறையின் உதவியுடன் அவர் கண்காணிக்கப்படுவதாகவும் போலீஸ் துறை தலைமை அதிகாரி தெரிவித்திருந்தார்.
சிலாங்கூரில் உள்ள விக்டர் சின்னின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் அண்மையில் போலீஸ் துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. கட்டாய நிறுவனக் கையகப்படுத்துதலில் சில ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து போலீஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.








