இந்துக்களுக்கான 8 மாநிலங்களில் 10 மின்சுடலைகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது சுமூகமாக நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் தெரிவித்தார்.
எட்டு மாநிலங்களில் 10 மின்சுடலைகளை நிர்மணிக்கும் திட்டத்திற்காக 20 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ள பிரதமருக்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.
நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவருமான எஸ். வீரப்பனின் அழைப்பின் பேரில் இன்று காலையில் தம்பினில் நடைபெற்ற 25 லட்சம் ரிங்கிட் செலவிலான புதிய மின் சுடலை மையம் கட்டுமானத் திட்டத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சண்முகம் மூக்கன் இவ்வாறு தெரிவித்தார்.
தம்பினில் இத்தகைய மின்சுடலையை அமைப்பதற்கு வீரப்பன் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்களுடன் இணைந்து, புத்ராஜெயாவுடன் நல்லதொரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்த திட்டம் தொடர்பான ஆவணங்களை ஒப்படைப்பதிலும், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதிலும் தமக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கிய வீரப்பனின் சிறப்பு அதிகாரி முரளிக்கு நன்றிக்கூற தாம் கடமைப்பட்டுள்ளதாக சண்முகம் மூக்கன் குறிப்பிட்டார்.
தம்பின் வட்டாரத்தில் ஒரு மின் சுடலையை நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற முயற்சியை ரெப்பா சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.வீரப்பன் கடந்த 2018 ஆம் ஆண்டில் மேற்கொண்டதாக அவரின் சிறப்பு அதிகாரி முரளி தெரிவித்தார்.
தம்பின் வட்டாரத்தில் ஏதாவது இறப்பு நேர்ந்தால் பிரேதத்தை தகனம் செய்வதற்கு தம்பினிலிருந்து பகாவ், சிரம்பான், மலாக்கா போன்ற இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பயண நேரம் ஒன்றரை மணியாகும். கோவிட்- 19 காலத்தில் பிரேதங்களை தகனம் செய்வதற்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் இவ்விவகாரம் தொடர்பாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பனும், தாமும் புத்ராஜெயாவிற்கு இரண்டு முறை சென்று பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனை சந்தித்து, இப்பிரச்னையை அவரின் பார்வைக்கு கொண்டு சென்றதாக முரளி விவரித்தார்.
தற்போது நெகிரி செம்பிலானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என்ற போதிலும் வீரப்பன் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப தம்பின் மின்சுடலை நிர்மணிப்புத் திட்டம், அடுத்த 12 மாத காலத்தில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










