மலாக்கா, குருபோங் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது வீட்டிற்குள்ளேயே உயிரிழந்து, உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை அண்டை வீட்டார் அந்த நபரைச் சந்திக்கச் சென்றபோது, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்றபோது, அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டார்.
நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். அவர் இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








