சபாவில் பிரபல மான சிபாடன் தீவில் உள்ள 'ஆமை கல்லறை' எனப்படும் நீருக்கடியில் உள்ள குகை அமைப்பில், புதிய வகை கடல்வாழ் உயிரினம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'பெல்டிடியம் பென்யு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறிய கடல்வாழ் உயிரினம், ஒரு கடல் ஆமையின் ஓட்டைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அஸ்மான் அப்துல் ரஹீம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
கடல் வாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தும் 'ஓஷன் சென்சஸ்' எனும் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆமைகளின் எலும்புக்கூடுகள் அதிகம் காணப்படும் அந்த நீருக்கடியில் உள்ள குகையில், ஒளிப் பொறிகளைப் பயன்படுத்தி இந்த உயிரினம் சேகரிக்கப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பு தென்கிழக்கு ஆசியாவின் கடல் பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது. இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் 'ராஃபிள்ஸ் புல்லட்டின் ஆஃப் ஜூவாலஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. "நமது கடல்சார் சூழலில் இன்னும் மறைந்திருக்கும் பல அதிசயங்களுக்கு இது ஒரு சான்றாகும்" என்று டாக்டர் அஸ்மான் தெரிவித்துள்ளார்.








