SARAWAK, BELAGA-விலுள்ள RAJANG ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில், அதில், பயணித்தவர்களில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளை, இதர இருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலையில் நிகழ்ந்திருந்த அச்சம்பவத்தில், KEDAH, PADANG SERAI-யைச் சேர்ந்த 36 வயதுடைய BALAVISHNU PERMALOO, 30 வயதுடைய RHUBAN APPAROO ஆகிய இருவரும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதாக, SARAWAK தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்களின் விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.நேற்று மாலை மணி 4.33 அளவில், அச்சம்பவம் குறித்து தகவல் பெறப்பட்டதை அடுத்து, BELAGA தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து 5 வீரர்கள், 31 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
CLINROOM INDUSRTI SDN BHD எனும் BAKUN அணை பழுதுபார்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அந்த 5 பணியாளர்களும், BELAGA-விலுள்ள JERAM MEJAWAH பகுதிகளைச் சுற்றிப்பார்ப்பதற்காக, அங்குள்ள கிராமவாசிகளிடமிருந்து அப்படகை வாடகைக்கு எடுத்துள்ளது தொடக்கக்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
உள்ளூர்வாசியான ROBERT JAANG என்பவர் அதனை செலுத்திய வேளை, JERAM MEJAWAH பகுதியில் நீரின் வேகம் கடுமையாக இருந்ததால், அப்படகு மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.படகை செலுத்திய நபர், நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயற்சித்ததில், மூவர் மட்டுமே காப்பாற்றப்பட்ட வேளை, எஞ்சிய இரு ஆடவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
நேற்று மாலை மணி 6.30 வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையில், அவ்விரு ஆடவர்களும் கிடைக்காததால், அந்நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதாக, அந்த மையம் அறிக்கையில் கூறியுள்ளது.இன்று காலையில், அவ்விருவரை தேடும் பணிகள் மீண்டும் தொடரப்பட்டன.








