அம்பாங், ஜூன் 04-
பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு தண்டனையை வழங்கும் விதமாக 3 மணி நேரம் வெயிலில் நிற்கவைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், மனித உரிமை ஆணையம் – SUHAKAM உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அதன் முன்னாள் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட மாணவர் வெப்பவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பம் புகாரை அளிக்கின்ற வரையில், SUHAKAM காத்திருக்க வேண்டியதில்லை. சுயேட்சை விசாரணை ஆணையமான SUHAKAM தாமாகவே முன்வந்து அது குறித்த விசாரணையை மேற்கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட விவகாரம் பொதுநலன் சார்ந்தது. மலேசியாவில் அச்சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தெரிந்துக்கொள்ள பலர் விரும்புகின்றனர். இந்நேரம் SUHAKAM-மில் தாம் இருந்திருந்தால், நிச்சயம் விசாரணை தொடங்கப்பட்டிருக்கும் என சிறார் நலன் ஆர்வலருமான ஜேம்ஸ் நாயகம் கூறினார்.
அதேவேளையில், விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதிபடுத்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர், SUHAKAM-மிடம் அதிகாரப்பூர்வமாக அது குறித்து புகாரளிக்க வேண்டும். போலீசின் விசாரணையுடன் ஒருசேர, SUHAKAM-மும் விசாரணையை மேற்கொள்ளலாம். அதில் கிடைக்கின்ற தகவல்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பெரிதும் உதவும் என்றாரவர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி, அம்பாங்-ங்கிலுள்ள ஓர் ஆரம்ப்பள்ளியின் திடலில், 3 மணி நேரம் திடலில் நிற்கவைக்கப்பட்ட 5ஆம் ஆண்டு ஆண் மாணவர், வெப்பவாத தாக்குதலுக்கு இலக்கானதால், அம்பாங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நரம்பியல் பாதிப்புக்கு இலக்கான அம்மாணவர், உடற்பேறு குறைந்தவர் என்ற நிலைக்கு ஆளானதாக, மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், இனி, அவரால் பள்ளிக்கு செல்ல முடியாது எனவும் கூறி, அவரது பெற்றோர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.








