கோல லங்காட், மார்ச்.25-
சிலாங்கூர் மாநிலம், கோல லங்காட், தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் உள்ள ஜாலான் வாஜாவில் நடந்த கலவர சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் 39 முதல் 45 வயதுடைய மூன்று ஆண்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவமானது, மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கிடையேயான தகராறில் தொடங்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலா லங்காட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுஃபியான் அமின் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, 38 வயதுடைய நபர் ஒருவர், நேற்று போலீசில் புகார் அளித்ததையடுத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது வீட்டிற்கு வெளியே 45 வயதான உறவினர் ஒருவர் கையில் வாள் போன்ற ஆயுதம் ஒன்றை ஏந்தியிருந்ததாகவும், அவரைப் பலர் தாக்க முயன்றதாகவும் அந்நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கானது, குற்றவியல் சட்டம் பிரிவு 148-இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுஃபியான் அமின் தெரிவித்துள்ளார்.








