மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, வரும் மே 14 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது.
குறிப்பாக, கல்வியின் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலக்கவியல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பாக இது அமையவிருக்கிறது.
மலேசியாவில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் நடப்பில் உள்ள சில கூறுகளைப் பயன்படுத்தி மலேசியர்களின் ஆற்றலை வளர்க்க மைக்ரோசாப்ட்– டில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்துவோம் என்று தியோ நீ சிங் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக தொழில்நுட்ப கண்காணிப்பு மாநாடான ஐ.ஆர்.சி யில் நிறைவுரையாற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தியோ நீ சிங் இதனை தெரிவித்தார்.
இம்மாநாடு ஆசியான் மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, இணையத்திற்கான சிறந்த அணுகலை உறுதி செய்வதிலும், இணையக் குற்றங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் தங்களுக்குரிய நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டதாக தியோ நீ சிங் கூறினார்.








