பணி ஓய்வு பெற்ற சிங்கப்பூர் பிரஜைகள், தங்களது அந்திமக்காலத்தை மலேசியாவில் தங்கி கழிக்க விரும்புவதாக, அந்நாட்டின் வர்த்தக நாளேடான BUSINESS TIMES செய்தி வெளியிட்டுள்ளது.
BLACKBOX RESEARCH AND QUALTRICS ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட அண்மைய ஆய்வு முடிவில், சிங்கப்பூரின் 3 பிரஜைகளில் ஒருவர், மலேசியாவில் தங்களது ஓய்வு காலத்தை கழிக்க விரும்புவது தெரியவந்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மலேசியா எனது இரண்டாவது இல்லம் திட்டத்தின் கீழ், மலேசியாவுக்கு மாற்றலாகி வந்த ராமசாமி நாராயண் பிரசாத், லதீபா மூர் ஆகியோர் மலேசியாவின் சுற்றுச்சூழல், கலாச்சாரம் தங்களை ஈர்த்துள்ளதாக கூறியுள்ளனர்.
மலேசியா எனது இரண்டாவது இல்லம் எனும் திட்டத்தைச் சேர்ந்த டேனியல் யாப் என்பவர் கூறுகையில், அண்மையக் காலமாக, மலேசியாவில் வசிப்பது குறித்து சிங்கப்பூர் பிரஜைகள் அதிகமாக தங்களிடம் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
சொத்துடமை முகவர் ஐவின் டே கூறுகையில், பணி ஓய்வு பெற்ற அதிகமான சிங்கப்பூர் பிரஜைகள் மலேசியாவில் வசிப்பதற்கு சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாக கூறினார்.
பசுமையான சுற்றுச்சூழல், ரிங்கிட்டின் மதிப்பு சரிவால் வாங்கும் சக்தி அதிகரிப்பு முதலான காரணங்களால், சிங்கப்பூர் பிரஜைகளின் அந்திமக்காலத்திற்கான தேர்வாக, மலேசியா இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.








