சிலாங்கூர், தெலுக் பங்லிமா காராங்கில் சட்டவிரோதமாக மானிய டீசலைப் பதுக்கி வைத்திருந்த வளாகத்தை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு அதிரடியாகச் சோதனையிட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமது ஹனிப் பின் அசாஅரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 8ஆம் தேதி, இரண்டு வாரக் கண்காணிப்பிற்குப் பிறகு எண் இல்லாத ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 4,000 லிட்டர் டீசல் மற்றும் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'ஸ்கிட் டேங்க்' ஆகியவை கண்டறியப்பட்டன.
முறையான ஆவணங்கள் இன்றி அங்கிருந்த 30 வயதிற்குட்பட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளதோடு, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட 50,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சோதனையின் மூலம் 15,000 ரிங்கிட் மதிப்பிலான நாட்டின் மானியம் காப்பாற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 16 முதல் 'ஒப்ஸ் திரிஸ் 4.0' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 2,794 சோதனைகளில், இதுவரை மொத்தம் 20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












