பினாங்கை சேர்ந்த 18 வயது மாணவன் தி. நவீன் கொலை வழக்கில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விட்ட 5 நபர்களின் விடுதலையை எதிர்த்து புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு நாடு முழுவதும் பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த 5 நபர்களை விடுதலை செய்த இருக்கும் பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகத்தின் உயர் அதிகாரி ஹஸ்மிசா ஹுசெயின் அறிவித்து இருப்பது, இந்த கொலை வழக்கில் நீதி மண்மூடிப் போகவில்லை என்று பலர் தங்கள் கருத்தை முகநூல் வழி தெரிவித்து வருகின்றனர்.நேற்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தின் முன் நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் மற்றும் அவரின் சார்பில் பேச்சாளராக கலந்து கொண்ட ஆகம அணியின் தவைவர் அருண் துரைசாமி மற்றும் மக்கள் முன்னிலையில் சட்டத்துறை அதிகாரி ஹஸ்மிசா ஹுசெயின் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்தின் இந்த உத்தரவாதம், நவீன் கொலை வழக்கில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் வழக்கில் திரும்புமுனை ஏற்படலாம் என்று அங்கு திரண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்ததுடன் அந்த செய்தியை கேட்டு, கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.அதேவேளையில் இச்செய்தியை கேட்டு நவீனின் தாயார் சாந்தி கண்ணீர் விட்டு அழுதார். நேற்று காலை 11.40 மணியளவில் நவீன் குடும்பத்திற்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சட்டத்துறை அலுவலகத்தின் வெளிவளாகத்தில் திரண்டனர். நவீன் கொலை வழக்கில் பிரதான சாட்சியான பிரவீன் என்பரின் சாட்சியங்கள் நம்பும்படியாக இல்லை என்றும், அவரின் சாட்சியங்கள் முன்னுக்குபின் முரணாக உள்ளது என்றும் கூறி, கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி பினாங்கு உயர் நீதிமன்றம் 5 நபர்களை விடுதலை செய்தது.








