டத்தோ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகின்னுக்கு எதிரான கையூட்டு வழக்கில் விசாரணைகள் முடிந்து விட்டனவா என்று அவரது வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு தனது கட்சிக்காரர் மீது குற்றம் சாட்டப்பட்ட போதிலும், இந்த விஷயத்தில் தொடர்புடைய பல நபர்கள் இன்னும் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்ய அழைக்கப்பட்டு வருவதாக என்று குறிப்பிட்டார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்கறிஞர்கள் முன்னிலையில், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசைன் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அவ்வினாவை எழுப்பினார்.
விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருந்தால், எனது கட்சிக்காரர் மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்வது நியாயமற்றது என்று அவர் கூறினார்.
அதற்கு பதிலளித்த துணை அரசு வழக்கறிஞர் ஒருவர், ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு மேல் விசாரணைகளைத் தடுக்க எந்த சட்டப் பிரிவும் இல்லை என்று கூறினார்.
அதனை ஏற்றுக் கொண்ட வழக்கறிஞர் டத்தோ அமர், விசாரணைகள் முடிந்த பின்னரே ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும். எனினும் இந்த மேலதிக விசாரணைகள் மூலம், ஷம்சுல் விடுவிக்கப்படலாம் என்று நம்புகிறோம், மேலும் அவர் குற்றவாளி அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி, ஷம்சுல் இஸ்கந்தர் தாம் குற்றமற்றவர் என்று வாதிட்டார். 2023 நவம்பர் 24 முதல் 2024 மார்ச் 5 ஆம் தேதி வரை தொழிலதிபர் ஆல்பர்ட் டீயிடமிருந்து RM140,000 ரிங்கிட் ரொக்கம், RM36 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்புள்ள தளவாடங்கள் மற்றும் மின்சாரப் பொருட்களைப் பெற்றதாக அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.








