தொழிலதிபர் ஒருவரிடம் RM300,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தையும் தங்கக் கட்டிகளையும் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்கள், சட்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு மறுஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களில் காவல்துறையினரும் இருப்பதால், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்த கூடுதல் சட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்காக அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷசெலி காஹார் தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து விசாரணை நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் எனவும், கொள்ளையடிக்க கூட்டாகச் சதி செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பின்னால் ஒருவர் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளதாக நம்பப்படுவதாகவும் ஷசெலி குறிப்பிட்டார்.
முன்னதாக, அக்கொள்ளை தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒருவர் காவர் வீரர்.
சோதனை நடத்தும் காவல்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர்கள், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகம் செய்யும் அந்த தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.








