கோலாலம்பூர், ஏப்ரல் 15-
மலேசிய பங்குப் பத்திர ஆணையம் மேற்கொண்ட ஆய்வில் முதலீட்டு மோசடிகளில் அதிகம் ஆண்களே எளிதில் ஏமாறுவதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் ஆயிரத்து 302 பேரை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 384 பேர் அதாவது 30 விழுக்காட்டினர் முதலீட்டு மோசடிகளுக்கு எளிதில் இலக்காகுகின்றனர். அவர்களில் 59 விழுக்காட்டினர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 384 பேரில் 34 விழுக்காட்டினர் அதாவது 31 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் முதலீட்டு மோசடிகளுக்கு எளிதில் இலக்காகும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
வருமான அடிப்படையில் பார்க்கையில் அதிகமாக 44 விழுக்காட்டினர் அதாவது மாதம் ஐந்தாயிரத்திற்கு குறைவான வருமானத்தைப் பெறும் B40 தரப்பினர் மோசடிக்குரிய முதலீடுகளை எளிதில் நம்புகின்றனர்.
பெரும்பாலான மோசடிகளில், ஏமாற்றுப்பேர்வழிகள் போலியான இணையப் பக்கம், சமூக ஊடக பக்கம், வெறொருவரின் பேங்க் கணக்கு முதலானவற்றை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது கண்டறியப்பட்டிருப்பதாக, மலேசிய பங்குப் பத்திர ஆணையம் கூறியுள்ளது.








