செர்டாங், ஆகஸ்ட்.03-
மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் யுபிஎம் அருகே நேற்று மழலையர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மரத்தில் மோதிய விபத்து, ஓட்டுநருக்குப் போதிய தூக்கம் இல்லாததே காரணம் என செர்டாங் காவல்துறைத் தலைவர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் உறுதிப்படுத்தினார்.
44 வயதான அந்த ஓட்டுநர் இரண்டு நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு 13 போக்குவரத்துச் சம்மன்கள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஓர் ஆசிரியரும் மூன்று மாணவர்களும் காயமடைந்த நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.








