வாகனத்திற்குள் சத்தம் போட்டதைக் கண்டித்த 56 வயது இ-ஹெய்லிங் ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று வெளிநாட்டினரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் அந்தப் பயணிகள், ஓட்டுநரின் கண்டிப்பால் அதிருப்தியடைந்து அவரைத் தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
ஜொகூர் தாமான் தான் ஸ்ரீ யாகோப், ஸ்குடாயில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தொடர்பான ஒன்பது வினாடிகள் கொண்ட காணொளி முகநூலில் வைரலாகி வரும் நிலையில், தன்னிச்சையாகக் காயம் விளைவித்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் இஸ்கந்தர் புத்திரி மாவட்டக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு உதவ வேண்டும் என மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் எம். குமாரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.








