ஜொகூர் பாரு, ஏப்ரல் 29-
ஜொகூர், போரெஸ்ட் சிட்டி-யில் கெசினோ சூதாட்ட மையம் திறக்கப்படவிருப்பதாக, ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு பொய்த் தகவலை வழங்கிய நபரை அடையாளம் காணப்பட வேண்டும் என்று பெர்ஜாயா கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்துள்ளது.
தனது வழக்கறிஞர் மூலமாக போலீஸ் புகாரளித்துள்ள பெர்ஜாயா நிறுவனம், நாட்டில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவும் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழக்கவும் தீய எண்ணத்துடன், அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட செய்தியை வெளியிடுவதற்கு முன்பு, அதன் உண்மைதன்மையை, அந்நிறுவனம் தங்களிடம் உறுதிபடுத்தியிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட செய்தியில் கூறியிருப்பது போல், போரெஸ்ட் சிட்டி-யில் கெசினோ சூதாட்ட மையத்தை திறப்பது குறித்து, தங்கள் நிறுவனத்தின் தோற்றுநர் வின்சென்ட் தான், பிரதமர், பேரரசரின் பிரதிநிதி, கெந்திங் குழுமத்தைச் சேர்ந்த லிம் கொக் தாய் உள்ளிட்ட தரப்புகளுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கவில்லை என பெர்ஜாயா நிறுவனம் திட்டவட்டமாக கூறியது.








