ஜொகூர் பாரு, மே 30-
3 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், மைவி ரக வாகனம் ஒன்று திடிரென தீப்பற்றிய கொண்டதில், அதில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் உடல் கருகி பரிதாபமாக மாண்டார்.
நெஞ்சை பதறச் செய்யும் அச்சம்பவம், நேற்றிரவு தெற்கு நோக்கி வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 33.3ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
அச்சம்பவம் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதை அடுத்து, தீயணைப்பு மீட்பு வீரர்கள் இரவு மணி 11.53 அளவில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாக, ஜொகூர் தீயணைப்பு மீட்பு துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
மண்ணை ஏற்றி வந்த லோரி, புரோட்டான் ஈஸ்வரா ஆகியவற்றுடன் நிகழ்ந்த அந்த விபத்தில், மைவி வாகனம் தீப்பற்றிக்கொண்டது.
தீயணைப்பு மீட்பு படையினர் வருவதற்குள், இதர வாகனங்களில் சிக்கியவர்களை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.
பின்னர், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, மைவி வாகன ஓட்டுநரின் சடலத்தை வெளியே கொண்டு வந்த தீயணைப்பு மீட்பு படையினர், மேல்கட்ட நடவடிக்கைக்காக போலீசிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.
உயிரிழந்தவர் இன்னும் அடையாள காணப்படாத நிலையில், அவருடன் பயணித்த 32 வயது பெண்ணும் ஒரு வயது நிரம்பிய ஆண் பிள்ளையும் காயத்திற்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டது.
புரோட்டான் ஈஸ்வரா-வில் வந்திருந்த இருவர் காயங்களுக்கு இலக்கான வேளை, லோரி ஓட்டுநர் காயங்களுக்கு இலக்காகவில்லை என ஜொகூர் தீயணைப்பு மீட்பு துறையின் பேச்சாளர் கூறினார்.








