மலேசியா 66 ஆவது சுதந்திரதின விழாவை கொண்டாடிய வேளையில் இந்நாட்டில் தமிழ், சீனத் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு, பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
நாட்டில் இன ரீதியான பிளவுகளும், பேதங்களும் ஏற்படுவதை தடுக்க தமிழ், சீனப்பள்ளிகளை உள்ளடக்கிய தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்று துன் முகாதீர் கூறியுள்ளார்.
மலேசிய கல்வி முறையில் தமிழ், சீனப்பள்ளிகள் இனப்பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு முடிவு கட்ட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதற்கு தமிழ், சீனப்பள்ளிகளை உள்ளடக்கிய தாய்மொழிப்பள்ளிகளை மூடுவதே சரியான தீர்வாக இருக்க முடியும் என்று தாம் நம்புவதாக நாட்டிற்கு இரண்டு முறை பிரதமராக பொறுப்பேற்றுள்ள துன் மகாதீர், தெரிவித்துள்ளார்.
மலாய் பிரகடனம் செயலகத்தின் ஏற்பாட்டில் "தேசியவாதிகள் வாரம்" எனும் சிறப்பு நிகழ்விற்கு பேட்டி அளித்த துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.
இதே போன்று கடந்த ஜுலை 28 ஆம் தேதி , மலாய் அரசியல் மீதான வட்ட மேஜை நேர்காணலிலும் பேட்டியளித்த துன் மகாதீர், "மூடப்பட வேண்டிய தமிழ், தாய்மொழிப்பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியமில்லை" என்று திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்தார்.
வந்தேறிகள் சமூகத்தினருக்கு குடியுரிமை இயல்பாகவே வழங்கப்பட்டு விட்டது. இது ஒரு மலாய்க்கார நாடு என்ற அடிப்படை உண்மையை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நாட்டில் உள்ள சில இனங்கள், தேசியப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதற்கு தொடர்ந்து மறுத்து வருகின்றன. தேசியப் பள்ளிகள் என்பது சமயப்பள்ளிகள் என்பதைப் போல அவர்கள் கருதி வருகின்றனர்.
தேசியப்பள்ளிகளில் கல்வி மற்றும் கட்டமைப்பு ரீதியாக பல்வேறு மேம்பாடுகள் கொண்டு வரப்பட்டும், சில இனத்தவர்கள் மத்தியில் இருந்து வரும் எதிர்மறையான சிந்தனையை அகற்ற இயலவில்லை. இதுவே பிளவுகளுக்கும், பேதங்களுக்கும் வித்திட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமானால் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று துன் மகாதீர் பரிந்துரை செய்துள்ளார்.








