உலு சிலாங்கூர், மே 06-
மலேசிய இந்து சங்கத்தின் உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவை, சொந்த பணிமனையை பெற்றிருப்பது மூலம் இந்து சமயம் மற்றும் கலை, கலாச்சார நடவடிக்கைகளை மேலும் செம்மையுற நடத்த முடியும் என்று MUDA கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவரும், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
குருவிக்கும் ஒரு கூடு என்பது போல் தனது சேவையின் விரிவாக்கத்தில் ஒரு பகுதியாக மலேசிய இந்து சங்கத்தின் உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவை சொந்த பணிமணையைப் பெற்று இருப்பது, அதன் செயல்பாடிற்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் இந்த முயற்சியை தாம் ஆதரிப்பதுடன் வெகுவாக பாராட்டுவதாக அதன் பணிமனையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் டாக்டர் சிவபிரகாஷ் மேற்கண்டவாறு கூறினார்.
உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் இந்த முயற்சியை பிற தொண்டூழிய அமைப்புகளும் ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்பதுடன் அதன் முயற்சி வெற்றிபெறுவதற்கு தாம் மிகச்சிறிய பங்களிப்பை வழங்கிய போதிலும் இத்திட்டத்திற்கு தாராளமாக நன்கொடை வழங்கிய வட்டார அன்பர்களுக்கும் தனது நன்றியை பதிவு செய்வதாக டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.
உலு சிலாங்கூர் வட்டாரப் பேரவையின் தலைவர் இராதாகிருஷ்ணன், செயலாளர் பாலு, தொண்டர்மணி கனமூர்த்தி அரிகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணிமனை திறப்பு விழாவில் பேரவையின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும் டாக்டர் சிவபிரகாஷ் வெகுவாக பாராட்டினார்.








