ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக் காவலில் தடைசெய்யப்பட்டப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்டப் போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணையை புக்கிட் அமானின் ஒழுக்கநெறி மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை முழுமையாகக் கையாண்டு வருகிறது.
இதுகுறித்த உள்வட்டார விசாரணை நிறைவடைந்துள்ள வேளையில், பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 12-ஆம் தேதி பொதுமக்களிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்டத் திடீர் சோதனையில், போலீஸ் நிலையச் சிறை அறைக்குள்ளிருந்து போதைப்பொருட்கள், கைபேசிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் தொடர்புடையப் போலீஸ் அதிகாரிகள் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








