கோலாலம்பூர், மே 28-
சரக்குகளை ஏற்றி வந்த லாரிகளை சோதனையிடாமல் கையூட்டு பெற்று, அவற்றை விடுவித்தது தொடர்பில் மலேசிய சுங்கத்துறையை சேர்ந்த நான்கு அதிகாரிகள் இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
51 வயது ரஹி ஷமுதீன், 42 வயது மாட் ஹஃபிஸான் அப்துல்லா, 40 வயதுஅஹ்மத் ஷஹ்ரேமி அஹ்மத் தமன்ஹுரி மற்றும் 38 வயது முகமட் சுஃபியான் ஹாஷிம் என்ற அந்த நான்கு அதிகாரிகள், நீதிபதி அனிதா ஹருன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
மொத்தம் 39 ஆயிரத்து 750 வெள்ளி சம்பந்தப்பட்ட கையூட்டு குற்றச்சாட்டுகளில் ரஹி ஷமுதீன் என்ற அதிகாரி மட்டும் 42 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
இந்த நால்வரும் கடந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி வரையில் KLIA அனைத்துலக விமான நிலையத்திலும், தாமான் ஸ்ரீ செர்டாங் மற்றும் பண்டார் பாரு சாலாக் திங்கியிலும் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








