ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் நிலைய தடுப்புக்காவலில் மரணம் அடைந்த 44 வயது எஸ். பாலமுருகன் குடும்பத்திற்கு 3 லட்சத்து 38 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கும்படி போலீஸ்துறைக்கும், அரசாங்கத்திற்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாலமுருகனை தவறாக தடுத்து வைத்திருந்தது, அவரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றுக்கு போலீசாரும், அரசாங்கமும் தார்மீக பொறுப்பேற்று இந்த இழப்பீட்டுத் தொகையை அவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சு தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி உயர் நீதிமன்றம் அளித்து தீர்ப்புக்கு ஏற்ப இந்த இழப்பீட்டுத் தொகையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்தது.
பாலமுருகனின் மரணத்திற்கு போலீசாரும், அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி அவரின் குடும்பத்தினர் தொடுத்திருந்த சிவில் வழக்கை விசாரணை செய்த சு தியாங் ஜூ, தடுப்புக்காவலில் மரணம் அடைந்த பாலமுருகனின் உடலில் 20 க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாக குறிப்பிட்டார்.
இவ்வழக்கில் பாலமுருகனின் மனைவி நாத்தனன் யூச்சோம்சுக் மற்றும் உறவினர் எஸ்.பால்ராஜ் சார்பில் வழக்கறிஞர் ஜெய்த் மாலேக் ஆஜராகினர்.








