சிலாங்கூர், மே 04-
பத்து ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் இன்று வரையில் விடை காண முடியாமல் இருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MH 370 விமானத்தை தேடி கண்டு பிடிப்பதற்கு அமெரிக்காவின் ஆழ்கடல் ஆய்வு நிறுவனமான Ocean Infinity நிறுவனம், புதிய தேடல் திட்டம் மீதான பரிந்துரை ஒன்றை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது.
கடலாய்வில் பிரசித்திப்பெற்ற நிறுவனமான Ocean Infinity நிறுவனம், அந்த தேடல் திட்டத்திற்கான புதிய பரிந்துரை மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் விளக்கியிருப்பதை MH 370 விமானத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களான குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
இந்த புதிய தேடல் நடவடிக்கைக்கு தேவையாண ஆவணங்கள் வகைப்படுத்தப்பட்டு,புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் தாங்களும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். அதேவேளையில் MH 370 விமானம் காணாமல் போனதற்கு விடை காணும் போராட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்து வரும் Ocean Infinity நிறுவனத்தையும் அவர்கள் பாராட்டினர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் வானில் காணாமல் போனது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு துப்பும் கிடைக்காதது வான் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.








