செரம்பான், ஏப்ரல் 30-
மறுவாழ்வு சிகிச்சைக்கு வந்தவரை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்ட தனியார் போதைப்பித்த மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் இரண்டு ஊழியர்கள் தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரினர்.
அந்த மறுவாழ்வு மையத்தின் மேற்பார்வையாளரான 48 வயது எம். ஜேசன் ஜெய் கணேஷ் மற்றும் உதவியாளரான 26 வயது கெல்வின் ரேய்மண்ட் ஆகிய இருவரும் நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஸிமுன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர்கள் தங்களுக்கு எதிரான அக்குற்றத்தை மறுத்தனர்.
கடந்த மார்ச் 19 ஆம் தேதி காலை 11 மணியளவில் நிலாய், லெங்கெங்கில் உள்ள போதைப்பித்த மறுவாழ்வு சிகிச்சை மையத்தின் நிர்வாக பிரிவு அலுவலகத்தில் PVC குழாயை பயன்படுத்தி 38 வயது மறுவாழ்வு சிகிச்சையாளரை அடித்து கடுங்காயத்தை விளைவித்ததாக அவ்விருவரும் கூட்டாக குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 பிரிவின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








