கோலாலம்பூர், வங்சா மாஜு பகுதியில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில், இருவர் லஞ்சம் கோரும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் 24-ஆம் தேதி பதிவான இந்த 8 நிமிட சிசிடிவி காட்சியில், தங்களை கூட்டரசுப்பிரதேச மக்கள் மன்ற பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் இருவர், தொழிலைத் தொடர பணம் கேட்டு மிரட்டுவது தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
"குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்ட்ட பொறுப்பாளர்கள் உடனடியாக நீக்கப்படுவார்கள்; லஞ்ச ஊழலுக்கு அரசு ஒருபோதும் இடமளிக்காது" என ஹன்னா இயோ எச்சரித்துள்ளார்.
அதேவேளையில் அந்த நபர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கோலாலம்பூர் மாநகர் மன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.








