சுங்கை பூலோ, ஜூன்.15-
பத்து மாத பெண் குழந்தை ஒன்று, குழந்தை பராமரிப்பாளரால் குளிப்பாட்டப்படும் போது தவறி விழுந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புஞ்சாக் ஆலாம் பகுதியில் நடந்தது. சுங்கை பூலோ மாவட்ட காவல் துறைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் முகமட் ஹாஃபிஸ் முகமட் நோர், குழந்தை மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே மயங்கிய நிலையில் இருந்ததாகவும், சுவாசம் இல்லாததால் சிகிச்சை பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது திடீர் மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை தொடர் விசாரணையில் உள்ளது.








