புத்ராஜெயா, மே 03-
நாட்டின் முதன்மை உற்பத்தி பொருளாக விளங்கும் செம்பனை எண்ணெய்க்கு எதிரான லேபில்-லையுடைய பல்சுவைகளிலான ஐஸ்கிரீம்-களை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.
பொதுமக்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில், நேற்று காலை மணி 11.45 அளவில், புத்ராஜெயா, PRESINT 3-லுள்ள பல்வகை கடை ஒன்றை சோதனையிட்ட போது, அவ்விவகாரம் அம்பலமானதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவினம் மீதான அமைச்சர் அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
செம்பனை எண்ணெய் கலக்கப்படவில்லை என்ற லேபில்-லை கொண்ட பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ்கிரீம்-களின் மொத்த மதிப்பு 897 வெள்ளி 60 சென்னாகும்.
தற்போது, 2022ஆம் ஆண்டு செம்பனை எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சட்டத்தின் கீழ், அவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு கூடிய பட்சம் 250 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 5 ஆண்டுகளுக்கு மேல்போகாத சிறைதண்டனை விதிக்கப்படலாம் என அமைச்சர் கூறினார்.








