உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருவதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற 'கியர்-அப்' (GEAR-uP) 2026 ஆம் ஆண்டறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், மலேசியாவின் பொருளாதாரம் 2024 இல் 5.2 சதவீதமாகவும், கடந்த ஆண்டு அதே அளவிலும் வளர்ந்த வேளையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றார். இதன் மூலம், நடப்பு ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.6 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மடானி பொருளாதாரக் கொள்கையின் கீழ் நிதி அமைச்சால் வழிநடத்தப்படும் 'கியர்-அப்' திட்டம், 2024 முதல் 2028 வரையிலான காலத்தில் 120 பில்லியன் ரிங்கிட் உள்நாட்டு முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அரசாங்கச் சார்பு முதலீட்டு நிறுவனங்களான GLC- யில் இத்தகைய ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் மூலம், நாட்டின் நிதி ஆதாரங்கள் பெருகி மக்கள் நேரடியாகப் பயனடைந்து வருவதாகவும் அமீர் ஹம்சா மேலும் குறிப்பிட்டார்.








