கோலாலம்பூர், ஏப்ரல் 30-
இஸ்ரேலின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிகிச்சையளிக்கும் கத்தார் உட்பட மேற்கு ஆசியாவிலுள்ள இதர நாடுகளுடன் ஒத்துழைக்க மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அனைத்துலக பொருளாதார மாநாட்டின் சிறப்பு கூட்டத்தில், கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியுடனான சந்திப்பில் பிரதமர் அந்த உத்தரவாதத்தை அளித்தார்.
பாலஸ்தீன விவகாரத்தில் இடைத்தரப்பாக இருந்து செயல்படும் கத்தாருக்கு ஆதரவு தெரிவித்த அவர், காசாவுக்கு மலேசியா வழங்கியுள்ள மனிதாபிமான உதவிகளை விவரித்தார்.
மேலும், கடந்தாண்டு நவம்பர் மாதம் காசாவில் சிக்கிக்கொண்டு தவித்த மலேசியரான நூருல் ஐன் ஹரோன்னை அங்கிருந்து தாயகத்திற்கு அழைத்துவருவதில் பெரும் பங்களிப்பை வழங்கியதற்காகவும் கத்தாருக்கு பிரதமர் நன்றிக்கூறிக்கொண்டார்.








