ஜகார்த்தா: ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் பெருந்திரளாக திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
ஆசியான் மாநாடுகளில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜகர்த்தாவில் பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். ஏசியான் மாநாட்டு நிகழ்வுகளுக்குப் பின் இன்று மாலையே பிரதமர் மோடி நாடு திரும்புகிறார்.
இந்தோனேசியா பயணத்துக்கு முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக திரு. ஜோகோ விடோடோ அவர்களின் அழைப்பின் பேரில் நான் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.
எனது முதல் நிகழ்ச்சியாக 20-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாடு இருக்கும். இப்போது 4-வது பத்தாண்டில் அடியெடுத்துவைத்துள்ள நமது கூட்டாண்மையின் எதிர்கால வரையறைகள் குறித்து ஆசியான் தலைவர்களுடன் விவாதிக்க நான் ஆவலாக உள்ளேன். ஆசிய நாடுகளுடனான உறவு இந்தியாவின் கிழக்கு கொள்கையின் முக்கிய தூணாகும். கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விரிவான திட்டமிடுதல் கூட்டாண்மை நமது உறவுகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.








