கோலாலம்பூர், மே 28-
அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரமும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையைப் பற்றி நாட்டின் பிரபல சமையல் கலை நிபுணரான செஃப் வான் என்ற டத்தோ ரெட்சுவான் இஸ்மாயில், சமூக ஊடகத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.
செஃப் வான் என்று அழைக்கப்படும் ரெட்சுவான் இஸ்மாயில், ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஆடையைப் பார்த்துவிட்டு, தைப்பூச உற்சவத்தின்போது எடுக்கப்படும் காவடியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
“ஐஸ்வர்யா ராய் காவடியை அணிந்துகொண்டு பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குச் செல்கிறார்,” என்று செஃப் வான் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஷெஃப் வானின் இந்தக் கருத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. அவரது கருத்து இந்தியர்களையும் இந்து சமயத்தினரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் சாடினர்.
நன்கு மதிக்கப்படுபரான செஃப் வான், நகைச்சுவை என்ற போர்வையில் ஒரு நடிகையின் ஆடையை, இந்துக்கள் போற்றும் பத்துமலைத்திருத்தல தைப்பூச காவடியுடன் ஒப்பிட்டு பேசுவது கண்டிக்கத்தக்கதாகும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ N. சிவகுமார் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்துக்களின் மனதை புண்படுத்தியதற்காக அந்த சமையல் கலை நிபுணர், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் ஷெஃப் வானுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை கோலாலம்பூர் செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது சுகர்னோ முகமது ஜஹாரி உறுதி செய்தார்.
மலேசியாவில் உள்ள பல இன, பல சமய மக்களைப் பிளவுப்படுத்தக்கூடிய கருத்தை ஷெஃப் வான் சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இனம், சமயம் மற்றும் அரச பரிபாலனம் சம்பந்தப்பட்ட 3 R விவகாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு புலனாய்வுப்பிரிவு விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.








