கோலாலம்பூர், ஏப்ரல் 30-
தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் புருணை ஆகியவற்றுக்கு அடுத்து பின்தள்ளப்பட்ட நிலையில் மலேசிய கல்வி முறை இருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து மலேசிய கல்வி முறையில் சீர்திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சு உறுதி பூண்டுள்ளது.
மாணவர்கள், கல்வியை பாதியிலேயே நிறுத்திக்கொள்ளும் பிரச்னையை கையாளுவது, 2027 ஆம் ஆண்டு கல்வி முறையில் பாலர் பள்ளி கல்விக்கு அதிக அழுத்தம் கொடுப்பது உட்பட நாட்டின் கல்வி முறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு முன்னெடுத்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
மலேசிய மாணவர்கள் அனைவரும் தங்களின் தொடக்க கல்வியிலிருந்து விடுபட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு கல்வி அமைச்சின் கீழ் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாலர் பள்ளி வகுப்புகள் விரிவுப்படுத்தப்படும்.
அதேவேளையில் சேவையில் உள்ள ஆசிரியர்களின் ஆற்றல் மற்றும் அவர்களின் தொழில்நிபுணத்தை மேம்படுத்திக்கொள்வதற்கு பல்வேறு பணித்திட்டங்களுடன் ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு சிறப்பு கவனம் செலுத்த விருப்பதாக அறிவித்துள்ளது.
தென்கிழக்காசியாவில் வறுமை நிறைந்த நாடான வியட்நாம், அமெரிக்காவுடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த போரில் சீர்குலைந்து, சின்னாபின்னமான நிலையில், அந்த குட்டி நாடு, தற்போது பொருளாதாரத்தில் துரிதமாக முன்னேறி வரும் நாடாக மாறியுள்ளது.
அதேவேளையில் மாணவர்களின் கல்வி அடைவு நிலையில் சிங்கப்பூருக்கு அடுத்து இரண்டாவது கல்வி வளர்ச்சி பிராந்தியமாக வியட்நாம் மாறியுள்ளது என்று உலக வங்கி அறிவித்துள்ளது.








