மணல் லோரி உபட்ட 5 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் ஒரு சிறுமி, பதின்ம வயதுடைய இளைஞர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜோகூர், செகமாட் அருகில் ஜாலான் செகமாட் - குவாந்தான் சாலையின் 5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டவர்களின் உடல்களை மீட்பதற்கு 21 பேர் கொண்ட தீயணைப்பு, மீட்புப்படையினரின் பலம் பயன்படுத்தப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார். ஒரு மணல் லோரி, புரோடுவா அல்சா, ஹோன்டா ஹ்.ஆர்.வி, புரோடுவா பெசா மற்றும் புரோடுவா விரா ஆகிய 5 வாகனங்கள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஹோன்டா ஹ்.ஆர்.வி வாகனம் ஒன்று, சாலையின் எதிரே பராமரிப்புப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் வாகனத்தின் வேகத்தை குறைத்த போது, அதனை பின் தொடர்ந்து வந்த மணல் லோரியினால் மோதப்பட்டது.
பின்னர் அந்த கனரக லோரி, திடீரென தடம் மாறி, எதிர்திசையில் நுழைந்த போது, அறுவர் பயணம் செய்த புரோடுவா அல்சா காரில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 10 க்கும் 46 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் அக்காரில் பயணம் செய்த மேலும் ஒருவர் கடும் காயங்களுடன் செகாமாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.








