கோலாலம்பூர், மே 04-
கோலாலம்பூர், ஜாலான் பூச்சோங் மேஸ்ரா என்ற இடத்தில் எந்தவொரு விளம்பரப்பலகையுமின்றி மிக ரகசியமாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இரண்டு கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறையினர் இன்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் உபசரணைப் பணியாளர்கள் என்ற போர்வையில் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 51 பெண்கள், 37 ஆண்கள் உட்பட மொத்தம் 90 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவர்.
அமலாக்க அதிகாரிகள் எளிதில் அந்த கேளிக்கை மையங்களில் நுழைந்து விடாமல் இருக்க, இரும்புக் கதவுகளை அரணாக கொண்டு அந்த கேளிக்கை மையங்கள் செயல்பட்டு வந்ததாக குடிநுழைவுத்துறையின் துணை தலைமை இயக்குநர் ஜஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 156 பேரிடம் சோதனை நடத்தப்பட்டதாக அவர் விளக்கினார்.








