மலேசிய வரலாற்றையே உலுக்கிய 1எம்டிபி நிதி ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் குற்றங்கள், வரலாற்றின் மிகக் கொடிய கொள்ளையனான ' அட்டிலா தி ஹன்' செய்ததை விடவும் பெரியது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா சாடியுள்ளார். உலக ஊடகங்களால் "உலகின் மிகப்பெரிய கொள்ளையாட்சி" என வர்ணிக்கப்பட்ட இந்த வழக்கின் 809 பக்க விரிவான தீர்ப்பு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
சுமார் 6 ஆண்டுகள் நீடித்த மலேசிய நீதிமன்ற வரலாற்றின் மிக நீண்ட இந்த விசாரணையின் முடிவில், நஜீப் ரசாக் மீதான 25 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். 1எம்டிபி நிதியிலிருந்து 2.28 பில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காகவும், பணமோசடியில் ஈடுபட்டதற்காகவும் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11.387 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் அவர் அனுபவித்து வரும் சிறைத்தண்டனை நிறைவடைந்த பிறகு, 2028-ஆம் ஆண்டு முதல் இந்த புதிய 15 ஆண்டு சிறைத்தண்டனை தொடங்கும் என்றும் நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா தன் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.








