மலேசியாவில் விரைவில் அமலுக்கு வரவுள்ள 2025 ஆம் ஆண்டு கல்வி சட்டத்திருத்ததின் கீழ், இடைநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 95 விழுக்காட்டிற்கும் மேலாக உயர்த்துவதை கல்வி அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது.
கல்வி அமைச்சின் சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் பேசிய துணைக்கல்வி அமைச்சர் வோங் கா வோ , கடந்த 2003-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்டாய ஆரம்பப்பள்ளி கல்வி கொள்கையினால், ஆரம்பப்பள்ளி மாணவர் சேர்க்கை 99 விழுக்காட்டை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போது இந்த இலக்கு இடைநிலைப்பள்ளி கல்விக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டத்தின்படி, மலேசியக் குழந்தைகள் அனைவரும் படிவம் 5 வரை கல்வியை முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களைத் தண்டிப்பது இந்த சட்டத்தின் நோக்கமல்ல என்றும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர வைப்பதே இதன் நோக்கம் என்றும் வோங் கா வோ கூறினார். இதற்காக, ஒரே பள்ளியில் 11 ஆண்டுகள் கல்வி கற்கும் கே11 மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கை அடுத்த ஆண்டு 16 ஆக உயர்த்தப்படும் என்றும் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.








