பெட்டாலிங் ஜெயா, மே 24-
அரச மலேசிய போலீஸ் படை வாகனங்களுக்கான மாற்று உபரிப்பாகங்கள் பராமரிப்பு மற்றும் விநியோகச் சேவை டெண்டரை வாங்கித் தருவதற்கு லஞ்சம் பெற்றதாக முன்னாள் உள்துறை அமைச்சரும், பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்- னின் முன்னாள் உதவியாளர் ஒருவர், ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
சையத் அமீர் முசாக்கிர் அல் சயீத் முகமது என்ற 42 வயதுடைய அந்த முன்னாள் உதவியாளர், நீதிபதி அவாங் கெரிஸ்னாடா அவாங் மஹ்மூத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த குத்தகைச் சேவையை பெற்றுகொடுப்பதற்கு கைமாறாக Nexuscorp Group Sdn. Bhd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வான் அசார் முஹம்மது யூசுப் என்பவரிடமிருந்து மூன்று லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக சையத் அமீர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 5 மடங்கு லஞ்சத் தொகைக்கு குறையாத அபராதம் விதிக்க வகை செய்யும் 2009 ஆம் ஆண்டுக்கான லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஹம்ஸா ஜைனுதீன்-னின் அந்த முன்னாள் உதவியாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








