பேராக், மே 06-
பேராக், தைப்பிங், ஜாலான் மேடான் சிம்பாங்கில் உள்ள ஒரு காரில் 21 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் 41 வயது மீனவர் மற்றும் 47 வயது உணவக உதவியாளர் ஆகியோரை பேராக் போலீஸ்படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தனர்.
சம்பந்தப்பட்ட காரில் சோதனை மேற்கொண்ட போது 262,275 வெள்ளி மதிப்பிலான 46 பிளாஸ்டிக் பொட்டலங்கள் உள்ளடங்கிய 21,037 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அந்நபர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 20,000 போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று முகமட் யுஸ்ரி கூறினார்.
கைது செய்யப்பட்ட அவ்விருவரும் மே 9 ஆம் தேதி வரையில் ஆறு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் அறிவித்தார்.








